பத்திரிகைத் துறையில், திரு. மாலன் அவர்களுக்குள்ள நீண்ட அனுபவத்தில், இப்புதிய வார இதழான ‘புதிய தலைமுறை’ வாசகர்களிடையே, பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
- ஏவி.எம்.சரவணன்,
திரைப்படத் தயாரிப்பாளர்
‘புதிய தலைமுறை’ இதழ் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுடைய புதிய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுதல்கள்.
- நா. மகாலிங்கம்,
தொழிலதிபர்
வெகுஜனப் பத்திரிகைகளின் பெரும் தாக்கத்தின் மத்தியில் எதிர்நீச்சல் போட வந்திருக்கும் இந்தப் புதிய முயற்சி இமாலய வெற்றிகள் பெறட்டும் என நெஞ்சார வாழ்த்துகின்றேன். தங்களது சீரிய அனுபவ முத்திரை இந்த ஜனரஞ்சக வெற்றியிலும் பெரும் பங்களிக்கும் என உறுதிபட எண்ணுகிறேன்.
- கே.பாலசந்தர்,
திரைப்பட இயக்குனர்
பெரும்பாலும் சத்தில்லாத, தரம் தாழ்ந்த பொழுதுபோக்கையே குறிக்கோளாகக் கொண்ட பத்திரிகை உலகம், வளர்ந்து வரும் சூழ்நிலையில், தாங்கள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் நோக்கத்துடன் ‘புதிய தலைமுறை’ என்ற இதழை நடத்த முன்வந்திருப்பது முழுமனதுடன் வரவேற்கப்பட வேண்டிய முயற்சியாகும். மாதிரி இதழ் சிறப்பாகவே இருக்கிறது.
- முனைவர் வா.செ.குழந்தைசாமி,
முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்
பத்திரிகைத் துறையில் பல்லாண்டு பரந்து, விரிந்த அனுபவம் கொண்டவர் நண்பர் மாலன். தமிழக, இந்திய, உலக அரசியல் மற்றும் பண்பாட்டு நிலைமைகள் பற்றிய தெளிவான பார்வையும் புரிதலும் கொண்டவர் அவர். மாலனின் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் ‘புதிய தலைமுறை’ அப்பத்திரிகையின் இலட்சியமான இளைஞர்களின் வாழ்வையும், எண்ணங்களையும் செழுமைப்படுத்தும் மேலான பணியை மிகச்சிறப்பாக செய்யும் என்றும், அப்பணியில் ‘புதிய தலைமுறை’ வெற்றியும் பெறும் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்.
- பிரபஞ்சன்
எழுத்தாளர்