Search Here For More Information

Puthiya thalaimurai புதிய தலைமுறை - இதழ்

சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை இதழில் என்னவெல்லாம் நமக்குப் பிடித்தமானது , எவையிருந்தால் ஒரு பத்திரிக்கையை தரமென்று ஒத்துக்கொள்வோம், எவை தேவையில்லாத பகுதிகள் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்கள். கூடவே வாங்கிப்படிகின்ற பத்திரிக்கையின் பெயரையும் கேட்டிருந்தார்கள். நான் வாங்கிப்படிக்கும் பத்திரிக்கையின் பெயர் அங்கே குடுக்கப்பட்ட பட்டியலில் இல்லாததால் அதனை தனியாகக் குறிப்பிடவேண்டிய கட்டத்தில் இட்டு நிரப்பினேன். நான் தற்போது வாங்கிப்படிக்கும் ஒரே புத்தகம் தில்லியில் வெளியாகும் வடக்குவாசல் மட்டுமே..

முன்பு விகடன் மட்டும் வாங்கிப்படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரைகள் , கதைகளை கிழித்து புத்தகமாக பைண்ட் செய்துகொள்வது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. ஆனால் சில வருடங்களாக அப்படி சேமிக்கத் தக்கதாக எனக்கு ஒன்றும் தோணவில்லை. அதன் வடிவமைப்பை மாற்றியதும் எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்... மேலும் இங்கே வலைப்பூக்களும் மற்றும் வாசிப்புக்களுக்குமே எனது பகுதி நேரம் செலவாகியதும் ஒரு காரணம். கருத்துக்கணிப்பில் என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன்.

புதிய தலைமுறையின் மாதிரி இதழை அனுப்பி வைத்திருந்தார் மாலன். அட்டைப்படம் இளைஞர்களுக்கானது என்று காட்டுவது போல இருந்தது. நான் பொதுவாக புத்தகத்தை பின்புறமாகவே படிப்பது வழக்கம். உருப்பட்டாப்பல தான் என நினைக்கிறீங்களா? அங்கே தான் உருப்பட என்கிற தலைப்பில் புத்தக அறிமுகப் பகுதி இருந்தது. எங்கே போனது என் அல்வாத்துண்டு புத்தத்தின் விமர்சனம் வெளிவந்திருந்தது. நிச்சயம் உருப்படத்தேவையான புத்தகமே என்பதால் தொடர்ந்து அது போன்ற நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் வருமென்றும் உருப்படியான இதழாக புதிய தலைமுறை இருக்குமென்றே ஃபர்ஸ்ட் இம்ப்ரெசன் விழுந்தது. .
இதற்கு முன் புதிய தலைமுறையை படித்தவர்கள் ஆரம்பத்திலிருந்து வாசித்து வெற்றி வெற்றி எனக்கூறிக்கொண்ட முதல் கட்டுரையை ஃபர்ஸ்ட் இம்ப்ரெசனாக எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்கள்.

அடுத்த பகுதியான கணினிப்பகுதியில் ஈகலப்பைப் பற்றி எல்லாமே ஓசி என்று கொடுத்திருந்தார்கள். ஆனால் ஈகலப்பை சிலநாட்களாக சரியாக பதிவிறக்கம் செய்ய இயலாமல் இருந்தது. மேலும் எல்லாரும் NHM க்கு மாறிவிட்டோமே என்று தோன்றியது. ஆனால் கேள்வி பதில் முறையில் நன்றாகவே தமிழ் எழுதிக்கு அறிமுகமாக இருந்தது.
எல்லாமே தலைகீழ் முறையில் சொல்லிக்கொண்டு வருகிறேன் என்பது நினைவிருக்கட்டும்.. :)

மறுகூட்டலுக்குப் பின் மாநிலத்தில் முதலிடத்தை தான் நூலிழையில் தவறவிட்ட செய்தியறிந்த மாணவனின் சோகக்கதை,நிறைவான கதையாக அருணா அவர்களின் ‘நிறைவு ‘ சிறுகதை, கோடம்பாக்கத்து சுனாமிகளான புது இயக்குனர்களின் கதை எல்லாமே எனக்குப் பிடித்தது. நடுவில் டைம் பாஸ் என்கிற குமுதம் ஆறுவித்தியாசம் போன்ற ஒன்று இருந்தது. என்னால் விடை காணவே முடியலை டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம். கண்ணைப் பரிசோதனை செய்யனும் போல.. :)

நடுப்பக்கத்து குடும்ப மரம் அழகு.. நேரு குடும்பத்துக்கப்பறம் நம்ம தமிழ்நாட்டுக்குடும்பம் தான் பெரிய ஆலமரம்.பைக் வாங்குவது எப்படி ? தல சொல்லறது நல்லவே இருக்கு. எனக்கு, நோய் அதன் அறிகுறிகளை எல்லாம் படித்து படித்து இப்பல்லாம் எதுவந்தாலும் அதுவா இருக்குமோ என்று பயப்படுகின்ற நோய் வந்துவிட்டது அதனால் சர்க்கரை இந்திய இளைஞர்களைத் தின்கிறது என்ற கட்டுரையை தாண்டி கடவுள் எங்கே இருக்கிறார் கட்டுரைக்கு சென்று விட்டேன்.ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருந்தாக வேண்டியதில்லை என்கிற வாதம் அருமையா இருந்தது.கவுன்சிலிங்க்ன்னா இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க அதிஷா & லக்கி எளிமையாப் புரியுது. உதவிக்காத்திருக்கு என்கிறபகுதி நன்றாக இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து தரவேண்டும்.

இளைஞர்களுக்கு அறிவுரை பிடிக்கறதில்லை, தமிழும் பிடிப்பதில்லை, புத்தகங்களும் பிடிப்பதில்லை.... தமிழில் புத்தகத்தைப் படிக்கவரும்போது சத்தமில்லாம கொஞ்சம் நல்ல விசயங்களையும் புகட்டிவிடுமாறு கேட்டுக்கிறேன்..